|
அட்டகாசம் செய்த கொள்ளையர் கப்பல்
மூழ்கடிப்பு : இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கை
புதுடில்லி : ஏடன் வளைகுடா பகுதியில்
அட்டகாசம் செய்த சோமாலியா கடற்கொள்ளையர்களின் கப்பலை, இந்தியக்
கடற்படைக் கப்பல் அதிரடியாக தாக்கி மூழ்கடித்தது.
சமீபகாலமாக ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை,
சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் செல்வது வழக்கமாக உள்ளது.
கடத்தப்பட்ட
கப்பலை விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கோடிக்கணக்கில் பணம்
கேட்டு மிரட்டல் விடுத்தும் வந்தனர். சமீபத்தில், ஜப்பான்
நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும், அதில் சென்ற
இந்திய கப்பல் ஊழியர்கள் 18 பேரையும், கொள்ளையர்கள் கடத்திச்
சென்றனர். கோடிக் கணக்கில் பணம் கொடுத்த பிறகு ஊழியர்களையும்,
கப்பலையும் விடுவித்தனர். இப்பகுதியில், தற்போது சவுதிக்குச்
சொந்தமான, "சிரியஸ் ஸ்டார் எண்ணெய்க் கப்பல் கொள்ளையர்களால்
கைப்பற்றப் பட்டு, சோமாலி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இக்கப்பலில் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 20 கப்பல்
சிப்பந்திகள் கொள்ளையர் பிடியில் இருக்கின்றனர்.
சோமாலியாவில் தேசிய அரசும் இல்லை; ஆண்டுதோறும் இப்பகுதியில்
பயணிக்கும் கப்பல் களை மடக்கி கொள்ளை கோஷ்டி பணம் பறிக்கும்
அளவு மூன்று கோடி டாலர் என்று கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிந்தது: இதுபோன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்க,
மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்தியக் கடற்படைக் கப்பலான
ஐ.என்.எஸ்., தபார், ஏடன் வளைகுடா பகுதிக்கு கண்காணிப்புக்காக
அனுப்பப்பட்டது. இம்மாதம் 2ம் தேதி முதல், இந்த கப்பல் அங்கு
ரோந்தில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், ஏடன்
வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த இரண்டு வர்த்தகக் கப்பலை
கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்றனர். ரோந்தில் ஈடுபட்டிருந்த
இந்தியக் கடற்படைக் கப்பல், கொள்ளையர்களை விரட்டியடித்து,
இரண்டு கப்பல்களையும் மீட்டது. இந்நிலையில், இந்தியக் கடற்
படைக் கப்பல், கடற்கொள்ளையர்களின் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தாக
கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஏடன் வளைகுடாவில்,
ஓமனில் உள்ள சலாலா என்ற இடத்திலிருந்து 285 கடல் மைல்
தொலைவில் இந்தியக் கடற் படைக் கப்பல் நேற்று முன்தினம்
இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த பகுதி வழியாக
ஒரு பெரிய கப்பலில் சோமாலியா கடற்கொள்ளையர்கள் விரைந்து வந்தனர்.
அவர்களின் கப்பலில் சிறிய அதிவிரைவு படகுகள், ஏராளமான துப்பாக்கி,
ராக்கெட் லாஞ்சர்கள் இருந்தன. உடனடியாக, "கப்பலை நிறுத்துங்கள்.
உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும்' என கடற்படை அதிகாரிகள்
தகவல் தெரிவித்தனர். பல முறை வேண்டுகோள் விடுத்தும் அவர்கள்
தங்கள் கப்பலை நிறுத்தவில்லை. மாறாக, நெருங்கினால் சுக்குநூறாக்கி
விடுவோம் என்று மிரட்டினர். உடனடியாக கடற்படைக் கப்பலை நோக்கி
துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினர், கொள்ளையர்.
பதிலுக்கு, கடற்படையினரும் அவர் களது கப்பலை நோக்கி சுட்டனர்.
இந்த சண்டையில், கொள்ளையர்களின் கப்பல் பலத்த சத்தத்துடன்,
தீப்பிடித்தபடி வெடித்துச் சிதறி கடலுக்குள் மூழ்கியது. அந்த
கப்பலில் ஏராளமான வெடிப்பொருட்கள் இருந்ததால், சத்தம்
மிகவும் பலமாக கேட்டது. அதே நேரத்தில், மூழ்கிய கப்பலில்
இருந்த இரண்டு அதிவிரைவு படகுகள் மூலம் கொள்ளையர்கள் தப்பிச்
செல்ல முயன்றனர். இவற்றில் ஒரு படகு தப்பி ஓடி விட்டது.
கும்மிருட்டு என்பதால் தப்பியது, மற்றொரு படகு கைப்பற்றப்பட்டது.
இதில் இருந்தவர்கள் என்ன ஆயினர் என்பது பற்றி தெரியவில்லை.
சில கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். கப்பலில் இருந்த
மேலும் சில கொள்ளையர்கள் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது.
மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் 20 கொள்ளையர்கள் இருந்தாகக்
கூறப்படுகிறது. கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்ட கப்பல், கொள்ளையர்கள்
பிரத்யேகமாக பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன்
வடிவமைக்கப் பட்டிருந்தது. இவ்வாறு கடற்படை செய்தித் தொடர்பாளர்
கூறினார்.
கிரீஸ் நாட்டு கப்பலும் கடத்தல்: சவுதி எண்ணெய் கப்பல் "சிரியஸ்
ஸ்டாரைத்' தொடர்ந்து, கிரேக்க நாட்டு சரக்குக் கப்பலையும்
கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். கடந்த வாரம் ஜப்பான்
கப்பலைக் கடத்தி இந்தியர்கள் சிலரை பணைய கைதிகளாகப் பிடித்து
வைத்திருந்தனர். பின், கணிசமான பணையத் தொகையைப் பெற்றுக்கொண்டு
அவர்களை விடுவித்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு
முன் அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற மிகப்பெரிய
கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து
கிரீஸ் நாட்டு சரக்குக் கப்பலையும் கொள்ளையர்கள் கடத்திச்
சென்றுள்ளதாக கிழக்கு ஆப்ரிக்க கடல் பயணிகள் சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.
|