|
வங்கதேச ராணுவ வீரர்கள் திடீர் புரட்சி
: உயர் அதிகாரிகளை சுட்டு வீழ்த்தினர்
தாகா : ஊதிய உயர்வு அளிப்பதில்
பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, வங்கதேச எல்லை பாதுகாப்புப்
படை வீரர்கள் நேற்று திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். துணை
ராணுவப் படை தலைமையகத்தில் இருந்த சக அதிகாரிகள் மீது,
அதிரடியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், துணை ராணுவப் படை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர்
உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக, இந்திய எல்லையில்
பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
வங்கதேச
தலைநகர் தாகாவில் பில்கானா என்ற இடம் உள்ளது. இங்கு, வங்கதேச
துணை ராணுவப் படை தலைமையகம் உள்ளது. வங்கதேச ரைபிள்ஸ்
படையினர் எனக் கூறப்படும் எல்லை பாதுகாப்புப் படையினரின்
முகாமும் இங்கு தான் உள்ளது. எல்லை பாதுகாப்புப் படையில்
பணிபுரியும் வீரர்கள், தங்களுக்கு போதிய ஊதிய உயர்வு அளிக்கப்படாததால்
நீண்ட நாளாகவே அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில்,
நேற்று காலை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவரும் ஒன்று
திரண்டு, தலைமையகத்திற்கு உள்ளேயே சக அதிகாரிகள் மீது கண்மூடித்தனமாக
துப்பாக்கியால் சுட்டனர். அதிகாரிகளும் திருப்பிச் சுட்டனர்.
பயங்கர கலவரமாக வெடித்தது. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும்
ஓசை கேட்டதால், அருகில் வசிக்கும் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
தலைமையகம் இருக்கும் இடம் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
சம்பவ இடத்தை உடனடியாக ராணுவம் சுற்றி வளைத்தது. ஹெலிகாப்டர்
மூலமாகவும் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வந்து கண்காணித்தனர்.
போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
எச்சரிக்கை: "ஆயுதத்தைக் கைவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும்.
உங்கள் கோரிக்கை தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சு நடத்த
தயாராக உள்ளார். உத்தரவுக்கு கட்டுப்படவில்லை எனில், கலவரத்தில்
ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என ராணுவ
அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், எல்லை பாதுகாப்புப்
படையினர் இதைப் பொருட்படுத்தவில்லை. இந்த சண்டையில் எத்தனை
பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள்
வெளியாகவில்லை. இருந்தாலும், எல்லை பாதுகாப்புப் படையைச்
சேர்ந்த நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள்
சிலரும் இதில் பலியாகியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. ரைபிள் படைப்பிரிவு இயக்குனரும் இதில் கொல்லப்பட்டதாகத்
தெரிகிறது. பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர்,
தலைமையகத்துக்குள் இருந்தவாறே, தனியார் "டிவி'க்கு மொபைல்
போன் மூலமாக பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது: வங்கதேசம் சுதந்திரம் அடைந்த காலத்தில்
இருந்தே எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு
வருகின்றனர். குறிப்பாக, சம்பள உயர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
முக்கியமான ராணுவ அதிகாரிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்து
வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அவர்களை
விடுவிக்க மாட்டோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால்,
இங்குள்ள செயலகம் மற்றும் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட அனைத்து
கட்டமைப்புகளையும் தரைமட்டமாக்கி விடுவோம். இவ்வாறு அவர்
கூறினார்.
இதுகுறித்து வங்கதேச அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமைச்சர்
கபீர் நானக் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, துணை
ராணுவப் படை தலைமையகத்துக்குள் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு
சென்றது. இந்த குழுவினர், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின்
பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினர். 30 நிமிடங்களுக்குப்
பின், அரசு குழுவினரும், எல்லை பாதுகாப்புப் படை
பிரதிநிதிகளும் காரில் வெளியில் வந்தனர். அவர்கள் பிரதமர்
ஹசீனாவுடன் பேச்சு நடத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ராணுவத்துக்குள் ஏற்பட்டுள்ள
இந்த திடீர் கலவரம் காரணமாக, வங்கதேச பொதுமக்களிடையே கடும்
பீதி நிலவுகிறது. ஏற்கனவே தொடர்ந்து பொருளாதார நிலையிலும்,
ஜனநாயக நடைமுறைகளில் பலவீனமாகவும், அரசியல் தலைவர்களிடம்
ஊழல் அதிகரித்த வங்கதேசத்தில், இக்கலவரம் எளிதில் அடக்கப்படுமா
என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையே, கலவரத்தில்
ஈடுபட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பொது மன்னிப்பு
அளிக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார். |