பாகிஸ்தானின் உளவுத்துறை
நிறுவனமான ஐ.எஸ்.ஐ. (Inter - services
Intelligence) இலங்கை ஊடாக இந்தியாவுக்குள்
ஊடுருவும் அபாயமிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர்
ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். இந்திய பாராளுமன்றத்தின்
மேல் சபையான ராஜ் சபாவில் நேற்று புதன்கிழமை
உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும்
பேசுகையில்; இந்தியாவுக்குள் ஐ.எஸ்.ஐ. ஊடுருவ முயற்சிப்பதை
மறுப்பதற்கில்லை. இதனால் நாட்டின் பாதுகாப்பு
பிரிவினருக்கு கிடைக்கும் எந்தவொரு மிகச் சிறிய
தகவல்களின் அடிப்படையிலும் செயற்படுவதற்கு அவர்கள்
தயாராகவேயுள்ளனர்.
இந்தியாவுக்குள் பயங்கரவாதம்
தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் சில
அமைப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கும்
அதேநேரம், இந்தியா அனைத்து மாநில அரசாங்கங்களுடனும்
மிகவும் ஒருமித்து செயற்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.ஒரு பரந்துபட்ட
அமைப்பென்பதால் அதனால் தெற்காசியாவின் ஏனைய
நாடுகளுக்குள் ஊடுருவ முடியும். கடந்த இரு மாதங்களாக
இந்தியாவின் கரையோர மாநிலங்களான தமிழ் நாடு மற்றும்
கேரளத்தின் கரையோரப் பாதுகாப்பும் கண்காணிப்பும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வுப்
பிரிவை நாம் மிகவும் பலப்படுத்தியுள்ள அதேநேரம்,
மாநிலங்களிலுள்ள புலனாய்வுப் பிரிவுகளையும் பலப்படுத்துமாறு
அறிவுறுத்தியுள்ளோம். தற்போது அவையும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்களது
இந்திய விஸாக்களுக்கான ஒவ்வொரு விண்ணப்பங்களையும்
நாம் இன்று (நேற்று) மிகக் கவனமாகப் பரிசீலித்தோம்.
எனினும் அதில், ஐ.எஸ்.ஐ.யைச்சேர்ந்தவர்களதோ அல்லது
ஐ.எஸ்.ஐ.யினால் நியமிக்கப்பட்ட முகவர்களதோ ஊடுருவல்
எதுவும் இந்தியாவுக்குள் மேற்கொள்ளப்படவில்லை என்பது
தெரியவந்துள்ளது. எனினும் ஊடுருவல்கள் இடம் பெறமாட்டாது
என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த நிலையில் எமது கண்காணிப்பை
தீவிரப்படுத்துவதே சிறந்தது. இதனால், எமக்கு கிடைக்கும்
மிகச் சிறிய அல்லது மிகச் சாதாரண புலனாய்வுத் தகவல்கள்
தொடர்பாகக் கூட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்தியா தற்போது ஏனைய பல
நாட்டு பாதுகாப்பு அமைப்புகளுடனும் இணைந்து செயற்படுகிறது.
இதில் இஸ்ரேலும் ஒன்று. எனினும் இஸ்ரேல் மட்டும்
அதில் இருக்கவில்லை. எம்முடன் இணைந்து செயற்பட முன்வரும்
அனைத்து நாடுகளுடனும் நாமும் இணைந்து செயற்படுவோமென்றார்.