பேர்ளின்: ஜேர்மனியின் தென்பகுதியிலுள்ள
உயர்தரப் பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட
கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 மாணவர்கள்
உட்பட 10 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் தென்பகுதியில்
உள்ள வின்னேன்டன் நகரிலுள்ள அல்போட்டிவில்லே தொழில்நுட்பக்
கல்லூரியிலேயே நேற்று புதன்கிழமை காலை இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை 9.30 மணியளவில்
கறுப்பு நிற உடையுடன் பாடசாலை வளாகத்துள் நுழைந்த
ஆயுததாரி அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டை
நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து
அந்நகரெங்கும் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ள அதேவேளை, பொலிஸ் ஹெலிகொப்டர்களும்
தேடுதலில் ஈடுபட்டுள்ளன. 25 வயதுடைய ஆயுததாரி
ஒருவரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் இந்நபர்
அப்பாடசாலையின் பழைய மாணவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஜேர்மன் பாடசாலைகளில் இவ்வாறான
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடைபெறுவது
அதிகரித்துள்ளது.